Thursday 20 February 2014

அணைப்பின் துயரோ சுகமோ

நீரணைத்து நதிகுதித்துப் பாயுதம்மா - அங்கு
 நீள்கருத்த முகிலணைத்த வேளை குன்றில்
வேரணைக்க மண்நெகிழ்ந்து விட்டதாலே - நல்ல
 வீறெடுத்து மரம் வளர்ந்து காணுதம்மா
ஏரணைக்கத் தான்புரண்ட சேற்றுமண்ணில் - இன்று
  ஏற்றம்கண்டு நெல்நிமிர்ந்து நிற்குதம்மா
யாரணைக்க  நாம்பிறந்து வந்தோமம்மா - இந்த
   ஞாபகத்தை மேனி கொண்டவாழ்வின்போது

போரணைக்க வாழ்வணைந்த பூமிமீதில் - ஏன்
 போதணைக்க அன்னை கையில் போய்க்கிடந்தோம்
மாரணைத்துப்  பால் குடித்த அன்புதன்னும் - இன்று
  மாறியெம்மை தீதணைத்த காட்சியு மேன்
ஊரணைக்கும் தீகொளுத்தி விட்டவர்கள் - தம்மை
  உலகணைத்துக் கரம்கொடுத்த போதிலெம்மை
பாரணைத்து நீ கொள்ளாது விட்டதென்ன - இந்தப்
 பாவம் என்னும் விதியணைத்த கோலமென்ன 

நாரணைத்த பூகழுத்தில் ஏறுமம்மா - உச்சி
ஞாயிற்றின் கதிர் அணைப்பின் வீழுமம்மா
சேரணைத்துக் கொள்கரத்தி னாலேயெம்மை - அந்தச்
சேதம்வந்து வாழ்வணைக்கும் முன்னதாயே
பேரணைக்கும் புகழ் இனிக்கும் போதில்லாமல் - என்றும்
பூஇருக்கும் போலுமென்மை யன்பு கொண்டே
நேரிணைந்து வாழ்வதன்றி வேறு மாற்றம் - இங்கு
நீயிணைத்துச் செல்லல் என்ப  விட்டிடம்மா

கூறனைத்துச் சேதிதன்னும் கொண்டு எம்மை - இக்
கூடிணைத்துப் பூமிவிட்ட கோலமென்ன
ஆறணைத்துக் கொள்ள ஆழிபோவதன்ன - எங்கள்
ஆற்றல்கொண்ட உயிரணைத்த மேனிதானவ்
வாறிணைந்து வாழும்போது விட்டுநிற்கா ஓர்
வேடிக்கை என்றேகம் துன்பம் செய்ததென்ன
சேறணைத்த மண்விளைந்த பூவென்றாகி  காலம்
சீரணைத்த வாழ்வு காணச்செய்வை யம்மா

No comments:

Post a Comment