Thursday 20 February 2014

இது ஏன்:?

மானாட மகிழ்வோடு மலராட மணிதீபம்
மாலையிளங் காற்றிலாட
வானோடு பொலிகின்ற  வின்மீன்கள் நடமாட
வெண்ணிலவு வீசியோட
மீனோடி வளர்கங்கை முப்புரங்கள் எரித்தவனின்
முடியோடு ஓடிவீழ
தீனோடிக் கொரித்தசிறு அணிலோடி திகைத்தபின்
திரும்பவந்த வழியிலோட

ஏனோடி மனமும் துயர் இழையோடி வருத்துவதேன்
இல்லையென் றோடவிட்டே
தானோடி மறைவதின்றித் தரையோடக் காலுமுண்டோ
தடையோடிவிதிக்கலாமோ
நானோடிச் செல்வதெ.ங்கு நடையோட முடியாது
நலமோடிச் சென்றதன்றே
ஏனோடி இழிவுசொல்லி இடையோடி மனம் வருந்தி
இருப்பதோ இதயம்வாடி

தீயாடி வரும்போது தெரியாது ஓடிமறை
திறமுண்டோ உயிருமோடி
வாயோடிக் கூறிடினும் வந்தசொல்லை நான்தேடி
வணங்கினேன் கோடிகோடி
பூவாடி விழமுன்பு போயோடிக் கரம்கொண்டு
பூசிப்ப தாரையோடி
நீபேடிஎன்றுமெனை நீரோடும் விழிசெய்து
நிற்பதில் என்னநீதி

சேயோடி விளையாடத் திங்கள் குடத்தண்ணீரில்.
தினம் வீழ்த்தக் கண்டுமோடி
தாயோடி அமுதூட்டத்  தமிழோடிஉணர்வூட்ட
தரையோடி வாழ்ந்த வாழ்வு
பாரோடிச் சுழலுதெனப் பலபேரும் சொலஓடி
பலதிசையும் பார்த்துமோடி
வேரோடிக் கிடந்தகுலம் விதையாக விலைபேசி
விற்கவோ என்றுவாடி

உணர்வோடித்  தலைசாய்ந்து முளமோடி மனம்காய்ந்தும்
உருவோடி இழிமை கொண்டு
தணலோடித் தீபற்றத் தமிழோடி நாபற்ற
தவிப்பது கண்டும் ஓடி
மணலோடு பிறந்தேனும் மண்மீது வளர்ந்தேனும்
மண்ணோடு மண்ணாகிடும்
கணமோடி வரும்நாளும் கனிவான விசைகொள்ளக்
காணுவதில் வேற்றுமை ஏன்?

No comments:

Post a Comment