Thursday 20 February 2014

கற்பனை பெண்ணாகி

தீ பூத்த கண்கள் தென்றல் சுடும் வேகம்
திங்கள்முகம் தீப்பிளம்பின் துண்டம்
நீர் ஓடும்கன்னம் நின்றதென்ன சூட்டில்
நிறை செவ்வண் ணெரிமலையின் சீற்றம்
நேர் கொண்ட பார்வை நீட்டுமிரு வாளோ
நெஞ்சமதில் மூச்சென்ற சூறை
கார் தோற்ற குழலும் கன்னமிரு பக்கம்
காற்றோடு போராடும் தோற்றம்

பார்போற்றும் வண்ணம் பார்த்த மகள்கோபம்
பனிபோர்த்த அடர்காட்டின் அச்சம்
நார் நீத்த பூவோ நலிகின்ற மென்மை
நடையோதள் ளாடும்சிறு பிள்ளை
வேர் விட்ட மரமோ விதைவயல் இல்மழையோ
வெற்றுவெளி சுடுவெயிலின் வதையோ
தேர் இல்லை அசைவில் தினம்பூத்த கொடியும்
துணை நின்றமரமற்ற நிலையில்

நேர் பார்த்து நின்றேன் நிலைஇவளின் ஏது
நேர்ந்ததென அறியாமை துக்கம்
சீர்ஏற்ற வதனம் சிதையுமொரு குற்றம்
செழுமைதனைக் கொன்றதெவ னென்றேன்
போர் கூட்டு முழவம் போடுமொலி இல்லை
பூமொட்டு விரல் கொண்டு காட்டி
யாரென்று கேட்டாய் நீயன்றி எவனோ
யானென்ன செய்வதென நின்றாள்

தேர் என்று தமிழை தினம் ஊட்டி விட்டால்
திரும்பி நீ நிற்பதென்  மனிதா
கூர்கொண்ட எழுதும் கோலெங்கு வைத்தாய்
குற்றம்நீ கொள்தண்டம் என்றாள்
எர்பூட்டி உழுவோன்  இதமான காலம்
உழுது மண் கொள்ளாத காலை
சேர்க்கின்ற பாவம் சுற்றமும் கொள்ளும்
சிறுதீயும் பசிஎன்று தீய்க்கும்

பேர் எண்ணிச் செய்யும் பெருவினைகள் யாவும்
பேசற்ற விதமாக மாறும்
வார்த்தோடும் மழையும் வற்றாத ஆறும்
வழிதோறும் தாகத்தை ஆற்றும்
பூர்வீக நன்மை புதிதாக்கி வைத்தேன்
பொன்னான மென்வீணை நாதம்
ஆர்க்கின்ற மணிகள் அசைவொலி சதங்கை
அத்தனையும் மண்கொள்ள வேண்டாம்

கோர் அழகினாரம் கொள் கவிதை சாரம்0
குறைவற்றே ஊற்றும் நீரோடை
மார்மீது தவழும் மகிழ்வோடு மழலை
மனங்கொள்ள உண்டெழும் கோலம்
தீர்ந்த பசியாலே சிரிக்கின்ற விழிகள்
தென்றலம் மேனிதொடத் தியங்கும்
தார்மீகம் கொள்ளு தருவதில் குறையா
தமிழ்பாடு பாடு பாடென்றாள்

No comments:

Post a Comment