Friday 14 June 2013

அன்பொடு வாழ்வோம்

குலவும் தென்றல் தருநல் மணமும் குருவிச் சலனமதும்
நிலவும் கலையும் முகிலும் அழகில் நெடுவான்  நீள்விரிவும்
அலரும் மலரும் இளமைத் தனமும் அதனின் காண்பொலிவும்
புலரும் பொழுதும் புதுமைச் செவ்வான் புதிதாம் ஆதவனும்

வளையும் பிறையும் மறையும் முகிலும் வானக் கருமையதும்
துளையும் மூங்கில் நுழையும் வளியும் தொடரும் ஒலிதானும்
முளையும் வளரும் பயிரும் வயலும் கதிரும் கண்டுமனம்
விளைவும் எளிமை சுகமும் மனதில் மகிழ்வும் நாம்கொள்வோம்

பலரும் பணிவும் பயனும் பதிலும் பழகும் நட்புதனும்
உலரும் விறகும் எரியும்     அனலும் அதுகொள் வெம்மையென
நலமும் அறியா நிலையும் செயலும் இலையாம் எனவாக்கி
உலகம் புகழும் உணர்வும் உரிமை எமதும் எனவாழ்வோம்

வலமும் இடமும் அறியும் மனதும் வரவும்  இளமையொடு
பலமும் பதிலும் பலரின் மனமும் தெளியும் உணர்வோடு
கலகம் சுழியம் கணமும் சினமும் களங்கம் இலையென்றே
விலகும் இருளும் விடியும் உதயக் கிளர்வும் மனங்கொள்வோம்

மனமும்  எளிதில்  மருளும் கணமும் துயரும் தனதென்றே
கனமும் கடிதும் கருவம் கயமை காணும் பொருளாக்கி
வனமும் வளரும் உயிரின் குணமும் காணின் அதைப்போக்கி
தனமும் எழிலும் தகைமை பொருளும் தாங்கிச் செழிப்புறுவோம்

No comments:

Post a Comment