Sunday 11 January 2015

அன்பு உலகின் விந்தை சக்தி

அன்பென்ற தொன்றிலை யாயின் 
  ஆகும் வாழ்வும் என்னதாகும் 
தென்றலும் தன் நிலை மாறும்
  தீமை எழுந்து நின்றாடும்  
பொன்னெழில் சிந்தும் நிலாவும்
   போய்முகில் மூடுதல் போலும்
தன்னெழில் விட்டிருள் கவ்வும்
   தாய்மனம் கல்லென ஆகும்

அன்பே உயிர்களின் சக்தி
  ஆளும் உணர்வலை பற்றி
புன்னகை கொண்டுள்ளம் பூக்கும்
  போதைமது வின்பம் சேர்க்கும்
தன்னலம் அற்றதாய் நெஞ்சம்
   தான்கொண் டுலாவிடும் எங்கும்
நன்மனம் மேன்நிலை கொண்டே
   நாளும் புதுமலர்வாகும்

அன்பே அகத்திருள் போக்கும்
   ஆணவம் நீக்கும் மெய்ஞானம்
தன்நிலை ஏற்கும் உள்ளெண்ணம்
  தாங்கும் அகங்காரம் போக்கும்
பொன்னை உருக்கிடும் தீயும் 
   போலும் கல்லாம்மனம் ஈரம்
தன்னைக் கொள்ளும் வகையாக்கும்
   தாயின் கருணையை ஒக்கும்

மின்னலென் றுள்ளத்தில் பாயும்
‘  மேகமழைக் குளிர் வீசும்
அன்பினைக் கொள் உலகாளும்
   ஆற்றல் திறன் உனைச் சேரும்
தென்புதரும் செல்லும் பாதை 
   தேடும் உயர்வினைத் தாரும்
அன்பினைக் கொள்ளின் நின்வாழ்வோ
   ஆகா என்னே விந்தை சொர்க்கம்

No comments:

Post a Comment