Tuesday 13 January 2015

தலைவியின் சோகம் (பொருளறியேன்)

‘மாலை மயக்குதடி தோழி - மன 
  மீறி யலை பெருகுதிந் நாழி
சாலை வழி இருளின் பயணம் - நிலை
  சற்றும் உணராத மௌனம் 
சேலை மறைத்த உடல்மேவித் - தனி
  செல்லும் குளிர்வாடைத் தென்றல் 
ஆலைக் கரும்பு பிழிந்தெனவே - வந்தே  
   ஆவி பிழிய விழி சொரிந்தேன்

தென்னை மரத்திரண்டு கிளிகள்   - தம்முள்
  தேனை யெடுத்த மொழிபேசிக்
கன்ன மிரண்டும் பட உரசி - அவை
  காதல்கொளும் காட்சிகண்டேன்
மின்னும் இருளெடுத்த மேகம் - எந்தன் 
  மேனி குலுங்க இடிபரவி
இன்னும் வருத்தல் என ஆகி - எனை
  ஏக்கம் கொள வதைப்ப தோடி

மன்னன் என வரிந்தேன் அவனோ - முழு
 மாயக் கதையிர வில்பேசி
சொன்னோர் மொழி வரைகள்மீறி .எனில்
 சொர்க்கமிருக்குதெனக்கூறி
தன்னில் எனைக் கொண்டேன் என்றும் - எனில்
 தன்னின் இதயமுள தென்றும்
முன்னின் றெனைக் காணப் பொய்கள் - சொல்லி
 மோகம் கொள வைத்துச் சென்றான்

ஆடும் மயில் நடனம் வெறுத்தும் - ஒரு
அன்னை அன்புமனம் இழந்தும்
கூடும் எழில் தருக்கள் பூக்கா - உயர்
குன்றில் மலையருவி துள்ளா
காடும் இயற்கை வனப்பிழந்தே - விடி 
கங்குல் பொழுதில் ஒளி பிறக்கா
நாடுமிருப்ப துண்டோ தோழி - இந்த
நாளில் எனக்கே னிந்தநீதி

பொன்னென் றழைக்க மகிழ்வுற்றேன் - தீயில்
போடக் கருதும் எண்ணமறியேன்
இன்பம் தருங்கிளியே என்றார் -என்னை
ஏனோ இலவங் கனிக் கேங்கும்
அன்ன வகையிருத்தி அன்னம்- நடை
அழகே எனப்போற்றி நின்றார்
பின்னை கதிரறுத்துத் தூற்ற எண்ணிப்
பேச்சில் அமுதமென மொழிந்தார்

தென்னங் குயிலினிசை குரலே - இவள்
தேம்பி அழும் பொழுதுமினிதே
என்னப் பலகதைகள்சொன்னார் - இவள்
ஏங்கிக் குரலிசைப்ப ளென்றோ
சின்ன விரலில் கணையாழி- கொண்டு
சேர்த்த நிலை மனதில் எண்ணம் 
நின்னைச் சகுந்தலைக்கு நிகராய் - என்றும்
நெஞ்சில் கொள்வனென உரைத்தோ

சொல்லில் பொருளுணர்ந்துகொண்டால் - என்
சோகம் தவிர்த்தும் வாழ்ந்திருப்பேன்
கல்லைப் போலிவளின் உள்ளம் - எனக்
கருதி எழிற் சிலை யென்றாரோ
முல்லை மலர் சிரிப்பு கமலம் - எனும்  
மோகம்விளை வதனம் என்றார் 
இல்லை எனும் வரையும்சுகித்தே - எழுந்
தோடும் வண்டினமென் றறியேன்

*************

No comments:

Post a Comment