Thursday 30 May 2013

இயற்கை வண்ணம்

இயற்கை அன்னை வரைந்ததோ இவ்  வழகுக் காட்சிகள்
வயற்கரைகள் அழகுச்சோலை வளர்ந்த  பூவனம்
நயமெழுந்த ஓடைநீரும் நடன தோகையும்
அயலிருக்கும் அழகு கண்டு அடிமையாகிறேன்

நிலவிருக்கும் நடுவிலோடி முகில் மறைத்திடும்
கலகலக்கும் குருவிக்கூட்டம் காற்றில் மிதந்திடும்
சலசலக்கும் அருவிவீழ்ந்து சத்தம் போட்டிடும்
பலதினிக்கும் காட்சிகாணப் பார்வை வீறெழும்,

தொலைவிற் பஞ்சு மேகம் பெண்ணைப்போல மாறிடும்
தொலைந்து பின்பு முயலைப் போல திரிந்து வேறிடும்
கலைவடிவம் காணும்கண்முன் காட்சிதோன்றிடும்,
நிலை இதுவும் இதயவானில் தேனை ஊற்றிடும்

பல மரங்கள் படர்கிளைகள் பறவை கூடிடும்
இலதெனவே இயற்கையின்ப உறவை நாடிடும்
நிலமிடை யோர் சிறியமானும் அருகில் துள்ளிடும்
கலகலத்தே இன்பவாழ்வும் கனிவதாகிடும்

அழகு மலர்ப் பூங்கொடிகீழ் அகன்ற விண்ணிலே
பழகும் பஞ்சு முகில்க ளோடப் பரவும் நிர்மலம்
விளங்குமெழில் விந்தைகொண்டு விடிவைநோக்கிடும்
இளங் கிளிகள் இன்ப வானில் எழவும் நாள்வரும்

No comments:

Post a Comment