Saturday 5 July 2014

கனவோ கற்பனையோ

(ஏக்கம் பெண்களுக்கு மட்டும்தானா இல்லையே)

பூப் பறித்தேன் மாலைசெய்தேன் பூவைக்குச் சூடப்
பொன்னிழையில் கோர்த்துவைத்தேன் பூவெழில் கூட்ட
தோப்பினிலே மாலையிளந் தென்றலும் வீச
தேவியவள் முன்நடந்தேன் சேதியும்கூற
காப்பிருந்த கைகளிலே காயமும் சேரக்
காணொருநாள்  கூடுமென்ற கற்பனைவாழ
மூப்பெடுத்த மனதுடனே மாலையும் சூட்ட
முன்னிருந்த தேதுமில்லை மாலை மண்வீழ

காற்றினிலே வந்த குரல் கானமும் பாடக்
கண்கள் முன்னே காண் அழகோ ஓவியமாக
விற்றிருந்தாள் வண்ணமலர் பொய்கையும் ஆட
வெற்றிஎன்றே தோன்றியது வேதனை போக
ஈற்றினிலே கண்டவளை என்வசமாக்க 
இன்ப உணர்வோடி மனம் இச்சையில் பூக்க
ஏற்றிடுவாய் என்றணைக்க எந்திழை கொள்ள
ஏதுமில்லை நீரில் விழுந் தேன்குளிர்மேவ
கோவிலிலே நின்றவளைக் கண்டதும் மாயை
கொள்ளைஎழில் கோணுமிதழ் குறுநகை பூக்க
ஏவிமனம் கேளெனவே என்னையும் தள்ள
ஏதெனநீ  ஏய்ப்ப தென்றும் இல்லை இன்றாக
பாவிமனம் பட்டதுயர் பனி யெனக் காய
பார்த்திடடி எழும்கதிரே பட்டெனும் கன்னம்
தாவியதில் கிள்ளிவிடத்  தென்றலில் கூடி
தேய்ந்துருவில் மாறிநின்றாள் சிற்பமென்றாகி

வெள்ளி மணிப் பொற்சதங்கை விண்ணிடைஆக்கி
வீதியெங்கும் பட்டு விரித் தின்பமும் கூட்டிக்
கொள்ளையெழில் பூநிரவிக் குங்குமம்  வாங்கி
கூடிவரும் வேளையவள் கன்னமும் ஆக்கி 
வெள்ளைப் பசும் பால்கொதிக்க வைத்ததும் ஆற்றி
வீடுமனை தூய்மை செய்தே விளக்கொளி யேற்றி
அள்ளி யணைத் தானந்திக்க ஆசையும் கூட்டி
அந்தி வரக்காத்திருந்தேன் அன்பதைக் காட்டி

கள்ளநிலா முற்றத்திலே காய்ந்தெனை வாட்டக்
காணும் எழிற்தென்றல் மணம் கற்பனை சேர்க்க
முள்ளெனவே நோகுமுடல் முப்புரமாக்கி 
மூவிழியோன் புன்னகையில் முற்றிலும் தீய்த்த
உள்ளெரிவில் உன் நினைவில் உன்மத்தமாகி
உயிரையும் நீ வாட்டுவதென் உன்நிழல் வேண்டி
கொள்ளைஎழில் கொண்டவளே கங்கையில்கூடிக்
கொள்ளும்,குளிர் விட்டெரித்துக் கொல்வதென் போடி


**********************

No comments:

Post a Comment