Wednesday 2 July 2014

தமிழன் என்றொரு இனமுண்டு!

இன்று போய் நாளைவா என்றுசொன்னோம் இன்றும்
எத்தனை நல்லவர் யாம்
கொன்று பேயாகிக் குடித்திரத் தம்கடை 
சிந்தவும் யாம் பொறுத்தோம்
வென்றுவா என்றேழுந் தேவிளை யாடிட 
வேண்டிக் களித்திருந்தோம்
சென்று வா நாளை என்றே குடல் கொண்டவன் 
செல்வதில் மெய் சிலிர்த்தோம்

தொன்றுதொட்டே தமிழ் சொல்பனுக்கொரு 
தன்னந் தனிக்குணம் காண்
என்றுமவன் இணையில்லை உலகினில் 
எத்தனை பற்றுதல் பார்
கன்றென நின்று பா .லுண்ட  வயதுடை 
கண்மணிச் செல்வங்களை
சென்றுவா போர்க்களம் என்றுரைத்த அன்னை
சிந்தனை மாற்றமின்றோ

நன்றுதான் நாளும்ந லிந்து முடன் எங்கள்  
நாட்டில் பிறந்தவரை
மென்றுதின்ற பெரு மன்னவர் மாவதை
மன்னித்து விட்டிடுவோம்
பன்றிகளாகிப் பரவசித்தோம் பட்டை   
பந்தைச் சுழன்றடிக்க 
வென்றவர் எங்களின் வீரத்திருநாடு 
வெற்றி என்றே களித்தோம்

ஒன்றுமில்லை உள்ளே ஓடுநிறை மண்ணென் 
றெப்படி நாமறிவோம்
தின்று களித்தெங்கள் தேகம் சுகித்திட
தேடிவழி சமைப்போம்
கொன்றவன் கைகளால் கூட்டியணைத்திடக் 
கொக்கரித்தே மகிழ்வோம்
நின்றுயர் வானில் பறந்திட எண்ணுதல்
நீசக் குருவி என்போம்

என்றும் தமிழ் மகன் என்பவர்க் கென்றொரு 
எல்லைதனை வகுப்போம்
மன்றம் கலைதமிழ் மாமரபு விதி 
மாற்றி அமைத்திடுவோம்
தென்றல் வரும் அது தேகம் தழுவிட 
தேடிப் பிரிக்கின்றதா
கொன்றவன் நின்றவன் வென்றவன் பேதமும் 
கண்டு பிரித்திடவா!/

அன்னையும் போயினள் அப்பனும் செத்தபின்  
ஆடிக் களித்திடுவோம்
என்னையும் நான்வந்த இன்மொழி என்றொரு
எண்ண மமதை விட்டோம்
சின்னவன் என்றெமை சிந்தனை கொள்ளுவோர்
சொல்லியே கேலி செய்தால்
தின்னவும் நஞ்சிட்டு தென்னவர் காத்திடும்
தீரத் தமிழன் இவன்

No comments:

Post a Comment