Wednesday 9 July 2014

வாய்ப்புகள் தந்திடும் வாழ்வு

வாழப் பிறந்தும் வழி இல்லென்று
வாட்டம் கொள்வோரே
வீழக்கிடக்கும் மனதால் வெல்லும்
வாய்ப்பைத் தேடுங்கள்
நீளக்கிடக்கும் வாழ்க்கைப் பாதை
நிறைந்தே வழிகாணும்
ஆழக்கடலே என்றாலும் காண்
அலைகள் கரைசேர்க்கும்

சாயக் கிடக்கும் தருவும் உலகில்
சரிந்த கோபுரமும்
மாயக் கனவே போலும் இந்த
மண்ணில் நிலைகொள்ளும்
நேயத்துடனே நெஞ்சும் நிமிர்ந்தே
நடையைக் கொள்ளுங்கள்
தேயக்காணும் நிலவும் வளரும்
திறனைக் கைக்கொள்வீர்

மேளக் கதியாய் அடிகள்பட்டு
மின்னல் கண்டாலும்
காலக் கதியில் ஓடும் பூமி
காற்றில் தொலைந்தாலும்
ஆழக் கிடக்கும் மனதில் தீரம்
அறிவைப் போற்றுங்கள்
வீழக் கிடைத்த வாழ்வேயல்ல
வெற்றிக்காம் எழுவீர்

கூவும்குயிலும் ஆடும் மயிலும் 
குருவிக் கூட்டங்கள்
தாவும் மந்தி தண்ணீர்பூக்கள்
தாங்கும் சுனைநீரும்
யாவும் கொண்டோம் அன்னைபூமி
யாரில் குறைசொல்ல
ஏவும் விதியில் எதுதான் குற்றம்
இயற்கை முரணாமோ

பூவும் பிஞ்சும் பின்னே கனியும்
பொலிந்தோர் சோலைக்குள்
நீவும்தென்றல் நீரின்குளுமை
நீந்தும் மீன்கூட்டம்
ஆவும் கன்றும் அம்மா என்கும்
அன்பின் தேடல்கள்
சாவும் அழிவும் துன்பம் ஆகிச்
சீற்றம் கொள்ளல் ஏன்?

நூலைக் காணும் விழிகள் இடையில்
நிற்கும் வியப்பெண்ணி
பாலை மணலின் சாயல் கொள்ளும்
பட்டுத் தோல் கண்டே
வாலைப்பருவ வண்ணம்தேடும்
வகையில் செல்லும் முன்
நாலைப் பத்தை நலமே எண்ணி
நாடும் நினைவிற் கொள்

சாலச்சிறந்த பண்போ டன்பும்
சாரும் உளம்கொண்டே
காலக் கொடுமை கலியும் நீக்கும்
கணத்தைத் தேடுங்கள்
ஞாலத்திடையே வாழுமெண்ணம்
நெஞ்சிற் கொள்ளுங்கால்
போலப் பூவாய் செல்லும் வழி வாய்ப் -
புக்கள் மலராதோ

பாலை வனத்தே கானல்நீரைப்
பார்க்கும் மான் போலும்
மாலைச் சேர்வில் மஞ்சள்வானில்
மறைவெண் மேகமென
சாலையோரம் தூறல்கண்டே
சாரும் தருவோடு
காலை கொள்ளும் நட்பும் மாலை
கனவென் றாவதுபோல்

ஆகும் மாயம் ஏதும் அறியா
அறமே கொண்டாலும்
போகும் பாதை முள்ளென் றாற்போம்
பயணம் என்னாகும்
நாகம் நிற்க நடுவே காட்டின்
நடை பாதை யோரம்
தேகங் கொள்ளத் தீயும் எழுந்தால்
திண்மை தொலயாதோ

சாகும் நினைவும் கொண்டே யுள்ளம்
சஞ்சல மாகாமல்
வேகும் மனதில் வெள்ளிச் சதங்கை
வீணை ஒலியோடு
பாகும் பழமும் பகிர்ந்தே தேனைப்
பருகும் சுவையாக
ஏகும் அன்புத் திசையில்கொள்வீர்
எடுக்கும் காலடிகள்

வாழ்விற் தோன்றும் வாய்ப்புக்கள் செல்
வழியை இலகாக்கும்
வீழ்வில் முடியும் வாழ்வேயென்று 
வீணில் எண்ணாது
தாழ்வில் எழுமின் தக்கோர் வழியும் 
தேடப் பரிவாகும்
தோள்கொள் தீரம் துணிவும்கொண்டு
தூரப் பாருங்கள்

தேயும் நிலவின் தேகம் தானும்
திரும்ப வளரும் காண்
மாயும் நளினப் பூக்கள் நாளை
மற்றோர் முகையவிழும்
பாயும் அருவிப் பாறைவீழ்ந்து
பரந்தே நீர்தூவும்
ஓயும் எண்ணம் இல்லைநாமோ
உறங்கிக் கிடக்கின்றோம்

சாய்வது கதிரா சற்றுப்பொறுங்கள்
சந்திரன் வானேறும்
தேய்வது கண்டால் சோகம்வேண்டாம்
தினமும் விடியல் காண்
மாய்வது ஒன்றே தீர்க்கும் வழியாய்
மயக்கம் கொள்ளாமல்
வாய்ப்பும் தாரும் வாழ்வின் பயனை
வெற்றிக் கணமாக்கு

No comments:

Post a Comment