Saturday 5 July 2014

இனித் தீருமா ??

கோட்டையிலே கொடிபறக்கப் பாரடா - அங்கு 
கொட்டும் முர சோங்குவதும் கேளடா
வாட்டமுறும் தீமைகளைக் காணடா - அவர்
வாழும் துயர் நாம்கொடுத்த தல்லடா
சூட்டினிலே பனி மறையும் ஏதடா - அது 
சொல்லிவைத்த விதி இயற்கை யாகுமாம் 
காட்டுமலர் பூத்தமணம் காற்றிடை - அது
காவிவரும் நாளிதுவாம் கொள்ளடா

தீட்டியவாள் கையெடுத்த வாழ்வடா - அதைத்
தீண்டியவர் தானுமழி  வாரடா
நீட்டிய நல்மென்னிழைத்த நூலதும் - அது
நேர்மையெனில் நேர் இரும்பு பாரடா
சூட்டி
ய பொன்முடி யெடுத்த நாளடா - அதில்
சோர்ந்து தவழ் தென்றல் புயல் ஆகுமா
வாட்டிய நம் நெஞ்செழுந்து வீங்குமா - நம்
வாழ்விருளை ஒளியெழுந்து மேவுமா

மூட்டியசெந் தீயெரியக் காண்கிறோம் - அதில் 
மூச்சிரைந்து நாம் நடந்தும் தேய்கிறோம்
காட்டிய வர் நீதி கரையேற்றுமா - ஓர் 
கரமெழுந்து நேர்மைதனைக் கேட்குமா
பாட்டினிலே துன்ப இருள்போகுமா - இனிப்
பக்குவமாய்க் காய்கனிந்து வீழுமா
வேட்டியினை தூக்கிமடித் தேறுவோம் - அந்த
விதிமலையாம் நாம்கடந்து ஓடுவோம்

கேட்டினிலே ஊறியவர் எம்மிடம்  - இக் 
கீழ்நிலலைக்கு தள்ள வைத்த காலமும்
சாட்டினிலே ஊருலகம் தேற்றினார் -  இச்
சாட்டையடி கண்டுமஞ்சி  ஓடுவர்
நாட்டினிலே தர்மம் எழுந்தோங்குமா - இனி 
நாம் நடக்க ஒர்வழியும் தோன்றுமா
வீட்டை நினைந்தோர் மகிழ்வும் பொங்குதே - இது
வீதியுடன் நின்றிடுமா சொல்லடா

No comments:

Post a Comment