Sunday 6 July 2014

மாற்றமில்லை!

வாழ்ந்து கெட்டது போதுங் கொள்ளடி சக்தி - இந்த
வான்வெளியினில் நீபடைத்ததென் வையகம் சுழன்றோடி
தாழ்ந்து நிற்குது தன்நிலையினில் மாறி - வெறும்
தங்கம் பூசிய தகதகமிளிர் தகரப் பந்தென மாறி
சூழ்ந்து கொண்டதென் சுற்றிலு மிருள் மூடிச் - சுவை
செங் கரும்பதன் அடிமுடிந்திட நுனியிவர்க்கென ஆக்கி
வீழ்ந்தே விட்டுயிர் ஆயிரமெனக் கோடி - இவர்
வீணென இனம் சாகுமிந்நிலை விட்டது கரம் மாறி

ஆழ் மனதினில்நோய் பிடித்தவர் கூடிப் - பகை
ஆற்றிடும் செயல் துயரெழுந்திட அகமுடன்புறம் மூடி 
மூழ்கிவிட்டது நீரிடை முழு மேனி இதில்
மோகங் கொள்ளெனும் முறைமைகள்தனை விதி கெடுத்தது மாறி 
பாழ் மனதினில்  வாழ்எனு மிச்சை கூட்டி - அன்னை
பார்வதிமகன் கோவில்கள்தமை பார்த்துருகிட நாடி
சூழ்விதி கொளக்காத்திடு மெனப்பாடி -  அதில்
சொல்லி யும்விழி பார்த்திருந்தவர் கூடிக் கொன்றது பூமி

ஆனந்தமென ஆடிடும்  பெரும் உலகம் - அதில்
அத்தனை சுக வாழ்வுகொண்டனர் ஆயினும் தமிழ்சொர்க்கம்
தேனந்த சுவை போலிருந் தது வாழ்வு - அதில்
தித்திப்பென்பது தீயருக்கென தீந்தமிழ் கசப்பாக்கி
ஏனந்த வகையானது மெனஎண்ண - உளம்  
மேற்றதென்பது தீமை என்றிடின் தேகம்கொள்வதும் இம்சை
வானந்த அளவாயினும் கொள் இன்பம் - தர
வைத்தவளதை மற்றவர்கொள விதி தமிழ் உயிர்நெருட

நாளெழுந்திடுங் காலையின் கதிர்கண்டே - நாம்
நல்லொருமையில் கொள்சுதந்திரவாழ்வெனக் காணென்றே
வாளெடுத்தெமை விசிடும் பகைகண்டும் - நிலை
வாய்த் திடுமென நேர்விழிகொள வந்தெதிரிகள் ஓட்டி
தோளுரம்கொளத் தீண்டிடும் ஒர் நாகம் இனும் 
தீயனும் பெரும்யானை யும்வரச் சிங்கத்தின் முற்தோன்றல்
ஏழைகள் செலும் பாதையில் விட்டேங்கி - துயர்  
ஏற்றிவைத் திடர்கூட்டிக் கொண்டெமை இம்சை செய்வதுமேனோ

வாழ்வுனை அழித்தேகுவம் எனும்கொள்கை - இந்த 
வான்பரப்பினில் நீபொறித்திட்ட வையகம் கொண்டாட,
பாழ்படுத்திட வேகம்கொண்டிவை காணீர் - இது
பேயுறைந்திடும் பூமி யென்றிடல் பேச்சினில் தீதில்லை
மாளென முழுத் தேசமும் வலிதாரின் - இந்த 
மான் புனலென வான்கதிரெழும் கானலை உளம்நம்பி 
வாழ்ந்திடு விதியாகிடும் நிலைகாணின் - எந்தன் 
வார்த்தைகள் தனில் மீள்பரிவுற மாற்றிடமனம் எண்ணா!

No comments:

Post a Comment