Saturday 5 July 2014

மாயவன் நாமோ?

தீதோடித் தென்றலென்று வீசுகின்றதே - கெட்ட
தீமை புகுந் தினமழிவைக் கூட்டுகின்றதேன்
காதோடு தொட்டசையும் காற்றதுவும் தேன் -  கொண்ட
காமலர் பூ வாசம்விட்டுக் காணுகின்றதேன்
யாதோடிப் பருவவனப் பாக்கியதோ காண் - பெண்டிர்
யாக்கைதனை காக்கைகழு குண்பதற்கீந்தோம்
ஏதோடிச் சென்ற துயிர் இத்தனை கோரம் - காலம் 
எம்குலத்தை வேரறுக்க இத்தனை வேகம்

வாதாடிக் கிடைப்பதுண்டோ விடுதலை கூறு = இங்கு
வந்தாடும் விதியின் வலி வீழ்த்தவும் நின்று
போதோடிப் புலருமெனப் பலபல ஆண்டு நாமும்
பொறுத்தோமே உயர்வை யெண்ணிப் பேதமைகொண்டு
சூதாடித் தோற்றபஞ்ச பாண்டவர் அங்கே - இங்கு
சூழுலகும் சேர்ந்தாடிச் சூழ்ச்சியில் வென்றே
மாதோடிக் கலங்க அவள் மறை துகில் உருவும் - இந்த
மாகயவர் செய்கை  கண்டோம் மாதவன் யாமே

காற்றோடி ஓலமிடக் கத்திடும் ஆழி - அதன் 
காணலைகள் கரை விழமுன்கதறிய காட்சி
ஆற்றோடி வரும் நீரும் ஆழத்திநோக்கி- வீழ்ந்து
அருவியென கூச்சலிடும் அதிலெழும் ஓசை  
ஊற்றோடி வரும் முகிலும் இடியொலி போடும் - தூர
உறுமியெரி மலைவெடிக்கும் ஓசையின் தாக்கம்
ஆற்றாது புயல்மரத்தை அடியுடன் சாய்க்கும் - அது 
ஆவெனவே சத்தமிடும், அதிர்வதும் கேட்கும்

நேற்றோடு பெருமையிவை யிழந்தது காண்பீர் - இன்று
நேரும்வதை தமிழினத்தர் ஈழவர் தன்னும்
தோற்றோடிக் கதறுமொலி  பெரிதென ஆகும் - இவர்  
துயரபெருகித் துடிக்குமொலி தோன்றிடக் கேட்கும்
மாற்றானின் கைகளிலே மரணத்தின் ஓலம் இது
மறுபடியும் மறுபடியும் எழும் நிலை காணும்
ஈறறாக வருவதென்ன எம்முள வாட்டம் - இதில்
எத்தனை நாள் இன்னுமென  ஏங்கிடும் நெஞ்சம்

நூற்றோடு ஒருவரென நாம்  உயிர் ஈயா - இந்த 
நேர் விழிமுன் கொடுமைதனை நெஞ்சமே கேளாய்
வேற்றோடு பகைமையுள்ளம் விட்டொன்று சேராய் - எம்
விரல்கோர்த்து ஒர்வழியில் விரைந்திடக் காண்பாய்
சேற்றோடு பிறந்ததுதான் செழுமலர்க் கமலம் - அது
சிறுமையெண்ணி குறுகலின்றி செழிப்பது காண்பாய்
ஆற்றாமை கொண்டலைந்தோம் ஆனதுபோதும் - இனி
ஆற்றலுடன் சுதந்திரத்தின் அழகு கொள்வோம் வா

No comments:

Post a Comment