Saturday 5 July 2014

அவள் சோகத்தின் ஏதென்ன?

(தலைவனும் தலைவியும்)


அவள் கூற்று:-’

அந்திவெயி லாறமலர் ஆடுமலை நீர்க்குளத்தில் 
வந்து விரி பேரழகைக் கண்டிருந்தேன் - அங்கு
விந்தையதோ எம்பிவிழும் வேலெனும்கண் விளைகயலும்
சொந்த இடம் விட்டு நிலம் வாழ்ந்திடுமோ

எந்த நிலை யான்மறந்து நின்றவளோ ஆள்நிலமும்
அந்தோ கதி யாயழிந்து போகையிலே  [  துயர்
செந்தணலும் பட்டதுவாய் சின்னவள் இங்கூற்றும்விழி
வந்தனல் நீர் வீழருவி யாவதுமேன்

வந்து விதி வாசலிலே வாரிமணல் வீசியபின்
எந்ததிசை போனதென நானறியேன் - இனி
சுந்தரமா தென்றலது சேரவும்கு தூகலித்து
நொந்த உடல் தான் துயர் விட்டாவதென்ன ?


அவன்:-

மேற்கடிவான் சூரியனும் மேவுமலை ஆழியிடை
தோற்றதெனக் காண் விழுந்திம் நாள்மறைய- அச்
சேற்றினிலே தாமரையும் சென்றதவள் காதலனின்
சீற்றமெழும் செங்கரமென் றேங்கியழ

சிந்தனையில் பூத்தவளே செங்கரும்பின் கீழ்ப்புறமே
சந்தமெழ வந்து நடை கொண்டவளே  - இச் 
சுந்தரமென் பேச்சினிலே சிக்கியவன் பித்தெனவே
இந்த மொழி உந்தனிடம் கொஞ்சுவதென்?

நேற்றிருந்த ஆனந்தமோ நிலையிருள கருமையெழும்
ஆற்றலென அருகிவிட ஆனவளே  - உன்
கூற்றினிலே உள்ளகுறை கேட்டுளமோ புரியவிலை
ஊற்றும் விழிகண் டுழன்று கொள்வதென்ன?

மந்திரமோ  போட்டவள்நின் மோகமழைக் குள்நனைந்த 
தந்திரமும் சூழ்கலியைத் தந்திடுமோ  - இவள்
செந்தழலின் ரூபமதில் சின்னவளாம் நீ மகிழப்
பந்தமுடன் உன்பதிலை பார்த்தவன்நான்

அந்தி யிருள் சூழுலகில் ஆனந்தமென் ஓசையிடும்
நந்தவன மாமலர்கொள் சோலைமரம் - இன்று
வெந்தெரியும் காற்றினிலே  வேதனையில் பூப்பொசுங்க
எந்தவிதி காரணமோ சொல்லிவிடு

No comments:

Post a Comment