Saturday 5 July 2014

நீதிக்குப்பின் பாசம்

துட்டரும் தீயரும் கூடுகிறார் - அதி 
தீவிரமாகவே தேடிவந்தார்
வெட்டவரும் செங் குருதிகண்டே அவர் 
வேடிக்கையாகவே ஆடுகிறார்
சட்டமும்கீழே கிடக்கின்றது - அதில் 
சத்தியம் ஏங்கி தவிக்கின்ரது
கட்டிய நீதியின் கோட்டையிலும் - அந்தோ 
காரிருள் கண்ணை மறைக்கின்றது

பட்டவர் செந்தமிழ்ப் பாவைகளும் - சிறு
பாலகரும் இளங்காளைகளும்
சுட்டவர்  மாஅரி வெட்டவரும்  - ஒரு 
தோற்றம் பொறித்த `கொடி`யவரே
கட்டியவன் கட்டக் கொண்டவளும் - அவள்
கண்மணியும் மண்ணிலீந்தவரும்
தொட்டிலிட்ட புதுக்கைக் குழந்தை - அதன்
சொந்தங்களும் சுற்றம் உள்ளவரே

நட்டநடு வீதி விட்டவரைச் - சொந்த 
நாடுபறித்து நல்லாடை விட்டு
தொட்டிழுத்துப் பெண்ணைக் கால்மிதித்தும் - அவர் 
தூய உடல் தன்னிலிச்சையுற்று
முட்டக் குடித்துக் கும்மாளமிட்டும் - இவர் 
மூச்சை இழப்பதைத் தான் சுகித்து
வட்டமாக நின்று வாய் பிதற்றிக் - கெட்ட
வார்த்தைகள் பேசியே புல்லரித்தார்

அட்டையென ஒட்டி ரத்தமதை - இவர்
அத்தனை செந்தமிழ் மாந்தர்களும்
கொட்டி இழந்திடச் சொத்தைவிட்டு - நல்ல
கோலங் கெடுத்துக் குழியிலிட்டே  
வெட்டிமண் போட்டதை மூடியபின் - அதில் 
வீடுகட்டிக் குடியேறுகிறார்
எட்டுத்திக்கும் ஏவும் கண்ணிருந்தும் - புவி
ஏதும் அறியாதார் போற்கிடந்தார்

சட்டியுள்ளே ஒரு ஓட்டையிட்டே - அதில் 
சற்றும் குறையாமல் நீரைவிட்டு
விட்டு விடுகிறேன் மூச்சையென்றும் - அதில் 
வீழ்ந்துயிர் நீக்க விளைகையிலே
கட்டி அழுகிறார் தேசங்களும் -= அவர் 
கைங்கரியம் இவர்கொள்கை யென்றே
எட்டியெமைக் குட்டிஓடுஎன்றார்  - ஏனோ
ஏய்த்து நிலம்  கொண்டவர்க்களித்தார்

சத்திய வேதனை கொள்ளுகிறோம் - இது 
சாத்திய மானது எப்படியோ
புத்தியைக் கொண்டவர் பார், அதமும் =- செய்வர்
பின்னாலிருப்பது நீதியென்றோ 
நித்தமுயிர் கொள்ளக் கண்டபின்னும் -இந்த 
நேரம் தவறுதல்  தன்னலமோ
கத்திஅழுதோம் ஏ..காந்தநிலை - கொண்டும் 
காசில் காணும் அன்பு பொய்த்ததுவோ

********************

No comments:

Post a Comment