Sunday 6 July 2014

வருத்துதல் ஏன் அன்னையே!

நினதருள் பலமொடு தினமதை பெறுவித
நினைவொடு தொழுதிடினும்
மனமது மகிழ்வெழ மடியிலினில் தலையிரு
மகனெனக் களிகொளினும்
கனமது முடியினில் கடுகள விலையெனக்
கலகலவென மகிழ்ந்தும்
எனதுள மதனிடை எது வொரு நெருடலை
எழுபட முயலுவதோ

வழிபடும் பொழுதுனை வருவது நலமெனும்
வளம்பெரு கிடவிருந்தும்
விழிகளில் பெருகிடும் ஒளிதனும் குறைவிலை 
வியன்பெறு வகை தெளிந்தும்
பழிகொள அயலிடை பகையிலை உறவுகள்
பனிமலர் மெதுமையெனும்
வழிபெற நிலையெடு வகைதனும் கொளமனம்
வருந்துவ திடையினிலேன்

பொழிலிடை அவிழ்மலர் புதுஇதழ் விழிபெறப்
புனர்வுறு மனமிழைந்தும்
ஒழிதுயர் உலகமும் உனதெனும் சுவைமிகு
உணர்வொடு  குரல்எழினும்
களிபெரு கிடவதை கறைபடு முடைதனும்
கடுகென எடைகொளினும்
நினைவெழு முளதிடை நிகழ்வது மெது தினம்
நெருடலைத்  தருநிலையேன்

விழுவதென் இனமிவர் விலகிடும் உரிமைகள்
விடுதலை கனவெனிலும்
குழுவென உயர்குல குணமுடை தமிழரின் 
குலவழி பிறந்தனெனும்
தழுவிடும் இனிதமிழ் தகைமையில் உயர்மொழி
தலைமுறை யிதில்பெரிதும்
நழுவிடப் பிறமொழி நடுவினில் வருவதும்
நகையல்லப் பெருந் துயரேன்

முழுபொழு திசைவுடன் முகைநறு மணமலர்
முதிர்விட லெனமுகமும்
விழுவது சரமலர் விருதுகள் புகழென
விருந்துகள் பலபெறினும்
கழுவினில் எரிபடும் கயமையின் உணர்வொடு
கவலைகள் மனம்கொளலேன்
தொழுதிடு முயர்தமிழ் துயருறும் நிலமெனில்
துவைபடு மனவதையேன்

விழுமலர் கொடிதனில் வெகுஎழி லுறவிதழ் 
விரிந்திட இருந்திடினும்
தழுவிடக் கொடிபடர் தருஇலை யெனிற்தனி 
தவித்திடு நிலைமனமும் 
எழுதுசொல் மொழியெனும் இனிதமிழ் அழகுடன்
இருந்திட மனம்மலர்ந்தும்
முழுஇனம் அழிவுறும் நிலைதனில் கரம்தரும் 
மனதுடன் எவரில்லை யேன்

No comments:

Post a Comment