Saturday 5 July 2014

ஏன் படைத்தாய்

வானம் படைத்தாய் வட்டஒளிப் பரிதியிட்டாய்
கூனம்புலி வானில் குறைய வளர் கோலமிட்டாய்
தேனம் மலரிடையும் தீண்டிக்கள் ளுண்வண்டும்
ஆனதிவை நீபடைத்தாய் அற்புதமாம் சக்தியன்றோ

கானக் குயில் படைத்தாய் காற்றிலொலி சப்தமிட்டாய்
மானும் படைத்துவிழி மருளு மெழில் மென்மையிட்டாய்
தானமென வாழ்வும் தருக்களுடன் பச்சை வயல்
போன வெயில் திரும்பப் புதுமையிவை காணவைத்தாய்

தீயும் சுடர் படைத்தாய் தென்றலால் பெருக வைத்தாய்
வாயும் இனித்துண்ண வகையாய் கனிபடைத்தாய்
பாயும் நதி மீன்கள் பசும்புல் பாய் விரித்தாய் 
நோயும் பிடித்த உளம் நிறைமனிதம் ஏன் படைத்தாய்   

மாநிலமாம்  மேதினியில் மக்கள் தொகை படைத்தே
மேனியெழில் இனம்பிரித்து மேன்மை நிற வெறியூட்டி
போநீ இடம் விட்டுப் புலம்பித்தான் திரியென்றே
ஏனிதயத் துள்ளே இரக்கமற்ற வெறுப்பீந்தாய்

மேனி சிலையழகாய் மின்னுமெழில் மெருகேற்றி
ஏனிந்த மாதர் இளமைதனில் எழுச்சியுற்று
வாநீ என அழைக்கும் வண்ணவிழி கண்டதன் பின்
சாநீ எனக்கொல்லும்  சஞ்சலத்தில் ஆழவிட்டாய்

ஆநீ செய் அகிலமதில்  அழகு மலர்ப் பூஞ்சோலை
தேனின் மலர்ப் பொய்கை திரியுமிளம் பூங்காற்று
வானிற் கலைந்தமுகில் வண்ண ஒளி இசைநாதம்
வேனிற் குடைவான வெயிலால் விரி கமலம்

நாணக் குறும்பார்வை நயனமதிற் பொய்க்கோபம்
கோணற் குவியிதழும் கொட்டிவிட்ட குங்குமமும்
பேணர் கரியதெனும் பெண்மைதனும் நீபடைத்து
ஆணிற் கொடியவரால் அணைப்பதென சாகவிட்டாய்

சூது பகை வஞ்சமுடன் சினங்கொண்ட சூழ்ச்சிமயம்
மாதுன்பம் மயங் கியொரு மரணத்தின் மூச்சிழுக்க
காதும்தான் கேட்டிழியும் காதகரின் கொச்சை மொழி
யாதும் இகம்வைத்தாய் எம் வாழ்வில் ஏன் இணைத்தாய்

தாயும் படைத்தளித்தாய் தாயுதரத்துள் கருவாய்
சேயும் படைத்தாய்பின்  சேருடலும் பிரித்தழுதும்’
மாயும் வகைசெய்து மனமழவும் செய்ததுநீ
போயுமிவ் வாழ்வுதனைப் பூமியிலே ஏன் படைத்தாய்

No comments:

Post a Comment